Wednesday, February 8, 2012

பூப்புனித நீராட்டு விழாவும் தமிழர் பண்பாடும்



சாமத்தியச் சடங்கு வளரும் இளம் பருவத்தில் இருக்கும் ஒரு சிறுமியின் ஆளுமையை மிக மோசமாகச் சிதறடிக்கும் ஆற்றல் மிக்க சடங்கு இது. பருவமடைதல், வயதுக்கு வருதல், பெரிசாதல், பக்குவப்படுதல், சாமத்தியப்படுதல் எனப் பேச்சுவழக்கிலும் பூப்புனித நீராட்டு விழா என எழுத்து வடிவிலும் அழைக்கப்படும் இச்சடங்கு, குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு
மாறும் ஒரு இடைக்கட்டத் தொழிற்பாடுகள் குழந்தையின் உடற் தொழிற்பாட்டில் ஏற்படும் இயல்பான ஒரு மாற்றத்தை ஊரறியச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு சடங்காகும். 'பெண் கரு உற்பத்திக்கு தயாராகிவிட்டாள்' என்பதை ஊரறிய தம்பட்டம் அடிப்பதே இச்சடங்கு கொண்டாடப்படுவதன் அடிப்படை நோக்கமாகும். குடும்பத்தின் பொருளாதார வசதிக்கேற்ப சடங்கின் பரிமாணமும் கூடிக்குறையும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் துஸ்ட ஆவிகள் தீண்டாதிருக்கும் பொருட்டு குப்பை, விளக்குமாறு போன்றவற்றில் இருத்தி நீராட்டுதல், வேப்பிலை சுற்றுதல், கழிப்புக்கழித்தல் என்பனவும், இவள் என் மகனுக்குரியவள் என்ற உரிமையைத் தக்கவைக்கும் பொருட்டு தாய் மாமனுக்கு சடங்கில் முதல் முக்கியத்துவம் கொடுப்பதும், 'தீட்டு' சீலையை சலவைத் தொழிலாளியிடம் ஒப்படைப்பதன் மூலம் பெண் பருவமடைந்த செய்தியை ஊருக்கு உறுதிப்படுத்தும் பொருட்டு ஊர் முழுவதும் தொடர்பு பேணும் சலவைத் தொழிலாளிக்கு முக்கிய இடம் கொடுத்தல் என்பன காலம் காலமாக இச்சடங்கின் முக்கிய அம்சங்களாகப் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன.
பருவமடைந்த நாளிலிருந்து வீடு தவிர வேறு இடங்களுக்குப் போவதைத் தடுத்தல், பள்ளி வாழ்வைத் தடை செய்தல், கூடப்பிறந்த ஆண் சகோதரத்துடன் கூட நெருங்கி நின்று கதைப்பதைத் தடுத்தல் போன்ற இரு நூற்றாண்டுப் பழைமைகள் இன்றைய காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றும் என்று சுட்டிக்காட்டிப் பேசுமளவிற்கு அரிதான நிகழ்வுகளாகி விட்டன.
”அனைவரிற்கும் கல்வி” என்ற சுலோகம் அயலவனின், வகுப்புத் தோழனின் தொழில் செய்யும் இடங்களில் உள்ள சமூகத்தின் பண்பாட்டு அம்சங்களை அறிந்துகொள்ள உதவியது போல், பண்பாட்டுப் படையெடுப்புகளும், பத்திரிகை போன்ற பொதுசனத் தொடர்புச் சாதனங்களும் உலக வாழ் நிலையை அறிந்துகொள்ளவும் அதைப் பின்பற்றவும் தூண்டியமையானது வேப்பிலை சுற்றுதல், பருவமடைந்த தினத்திலிருந்து ஒரு மாதமோ அதற்கு கூடிய நாளோ வீட்டு மூலைக்குள் முடக்கிவைத்தல், இரும்புத்துண்டும் கையுமாய் திரிதல் போன்ற மூடப் பழக்கங்களை இல்லாமல் செய்துவிட்டது மட்டுமன்றி, பருவமடைதல் கடவுள் செயல் என்ற நம்பிக்கையையும் போக்கடித்துவிட்டது.
ஆனால், இன்று கண்முன்னே நடைபெறும் சில அலங்கோலங்களைப் பார்த்தால் மேற்கூறப்பட்ட மூடப் பழக்க வழக்கங்களே பரவாயில்லையோ என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. அதிலும் ஒன்றரைத் தசாப்தங்களுக்கு முன்பு தமிழ் மண்ணில் நுழைந்த வீடியோ தொழில்நுட்பம் ஈழத்து அறிவுசார் வளர்ச்சிகளை உலகெங்கும் பரப்ப முயன்றதை விடவும் காரணகாரியத் தொடர்பற்ற, மனம் போன போக்கின்படி செய்யப்படுகின்ற, மூடநம்பிக்கைகளை விடவும் மோசமான புதிய புதிய சடங்குகள் புதிது புதிதாக மனித மூளையில் உதிக்கக் காரணமாக மாறியிருக்கிறது. சமூக விழிப்புணர்வு, அறிவூட்டல், பண்பாட்டுக்கலப்பு எது வந்தும் கூட மாற்றமடையாது பேய் பூதங்களில் நம்பிக்கை வைத்து உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படும் எத்தனையோ சடங்குகளை, ஆட்டங்காண வைத்து வெறும் சம்பிரதாயங்களாக மாற்றிய வல்லமை இந்த வீடியோ தொழில் நுட்பத்திற்கு உண்டு. இதன் வருகையுடன் சடங்குகளில் பழையன கழிதலும் புதியன புகுதலும் பரவலாக இடம்பெறத் தொடங்கியதுடன் இந்த கண்மூடித்தனமான புதிய சடங்குகள் பெரும்பாலும் படித்த, நடுத்தர வர்க்க குடும்பங்களிலேயே அதாவது மூடப்பழக்கங்களில் மூலத்தை அறிவுத்தேடலின், விழி கண்டறியும் வாய்ப்பும் அனைத்தும் டாம்பீக வாழ்வுக்குள் அமுங்கிப் போய்க்கிடக்கும் குடும்பங்களிலேயே அதிகம் கடைப்பிடிக்கப்படும் அவலத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது.
புதுப்புது நுட்பங்கள் 
ஆளுயரத்திற்கும் அரையடி மேலாவது வேலியடைத்துக் குளிக்கும் பண்பாடு, நெருங்கிய உறவுகளுடன் மட்டுமே பால், அறுகு, வைத்து நீராட்டும் பண்பாடு ஊர் முழுவதையும் கூட்டி ஊர்ப் பொதுக் கிணற்றுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று நீராட்டும் நிகழ்வாக மாறியிருக்கிறது. கன்னிப் பெண்கள் தவிர்க்கப்பட்டு வயது வந்த பெரியவர்கள் மட்டுமே அதிகம் கலந்துகொள்ளும் நிகழ்வு, விதவிதமான நிறங்களில் நீர் நிறைத்து, ஒற்றை விழ ஒன்பதோ, பதினொன்றோ அதற்கும் மேலோ செம்பெடுத்துச் சென்று பிள்ளையின் தலையில் நீர் ஊற்றுதல், குத்துவிளக்கு எடுத்தல் பூப்போடுதல் என்று சிறுமியரையும், இளம்பெண்களையும் களத்தில் இறக்கியிருக்கிறது. இதில் அவலம் என்னவென்றால் ஒரேவித ஆடை அலங்காரங்கள் முக்கியம் பெறுவதால், ஏழைப்பெற்றோருக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் மனமகிழ்வுக்கு உரிய ஒரு நிகழ்வு தேவையற்ற மன உளைச்சலையும், சங்கடங்களையும், வரவுக்கு மீறிய செலவையும் ஏற்படுத்துவதுதான்.
தொட்டிக்குள் நீர் நிரப்பிப் பூக்கள் போட்டுப் பிள்ளை நீராடுவது போல் படம்பிடிக்கும் நிகழ்வு கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நடுத்தர வர்க்கக் குடும்பங்களிடையே பின்பற்றப்படும் புதிய தொழில்நுட்பம், பிள்ளையை நன்கு அலங்கரித்து மணவறை கட்டி வீட்டுச் சடங்குகளை முடித்தபின்னர் கோயில் கும்பிடுவதற்கு, பிரதான பாதையால் ஊர்வலமாக மேளதாளங்களுடன் அழைத்துச் செல்லுதல் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றத் தொடங்கியிருக்கின்றன.
வெளிநாட்டுக்கு அனுப்பி திருமணம் செய்துவைக்க வேண்டி வந்தால், பிள்ளையை அலங்கரித்து ஆசை தீரப்பார்க்க முடியாமல் போய்விடுமாம் என்று தான் இப்படியெல்லாம் செய்கின்றோம் என்று செய்யும் செயல் எல்லாவற்றிற்கும் ஒரு சப்பைக்கட்டு கட்டிவிடுவது பொதுவாகிவிட்டது.
ஒன்றையொன்று வெல்லும் கேலித்தனங்கள்
'உன்னை விரும்புகிறேன்' என்று கடிதம் போட்டாலோ, நேரில் கேட்டாலோ உள்ளத் தெளிவுடன் பதில் சொல்வதை விட்டுவிட்டு கத்திபொல்லுடன் கிளம்பிவிடும் இரத்த உறவுகள், 'என் பிள்ளை கருத்தரிக்கும் தகுதி பெற்றுவிட்டாள்' என்று மேளதாளங்களுடன் ஊர்கூட்டிப் பறைசாற்ற எப்படிச் சம்மதிக்கின்றனர்?
வாகனங்களில் பயணிக்கும் போதோ, பொது இடங்களிலோ தவறுதலாக கை கால் பட்டுவிட்டால், முறைத்துப் பார்த்துச் சில சமயம் செருப்புக் கழற்றும் அளவுக்கே கோபப்படும் நாம் வெட்க உணர்வு எதுவுமின்றி பலர் முன்னிலையில் குளியல் காட்சிக்குத் தயாராக எப்படிச் சம்மதிக்கின்றோம்?
மாதக்கணக்கில் வீட்டு மூலைக்குள் முடக்கி, காலை மாலை என்று முட்டை, நல்லெண்ணெய், உழுத்தங்களி, சரக்கரைப்பு என்று ஊட்டமுள்ள உணவுகளின் அளவுக்கதிகமான திணிப்புக்கு எதிராக முரண்டு பிடித்து முற்றாக ஒழித்த எமக்கு, கழிப்புக்கழிக்கும் வரை இரும்புத் துண்டும், வேப்பிலையுமாய்த் திரிவதை இல்லா தொழித்து இரண்டு கிழமைக்கு முன்தாகவே பாடசலை, ரியூசன் என்று பறந்தோடும் வல்லமைபெற்ற எமக்கு 'நான் கருத்தரிக்கத் தயார்' என ஊர்கூட்டிப் பறைசாற்றும் இந்த அசிங்க நிகழ்வை மட்டும் ஏன் இல்லாமல் செய்ய முடியவில்லை? அதிலும் பொருளாதார வசதி குறைந்த பெற்றோரைப் பிடிவாதம் பிடித்தோ அல்லது பயமுறுத்தியோ வகுப்புத் தோழிக்கு எப்படி எப்படியெல்லாம் கொண்டாடினார்களோ அதேபோல் எனக்கும் செய் என்று நிர்ப்பந்திக்கும் அளவுக்கு நாம் வந்தது ஏன்..?
வேப்பிலை சுற்றுவதையும் இரும்புத்துண்டும் கையுமாய் திரிவதையும் மூடத்தனம் என்று உணர்ந்து கைவிடும் அளவுக்குச் சமூக விழிப்புணர்வு பெற்ற, படித்த பெற்றோர், அதைவிடவும் மோசமாக 'பருவமடைதல் என்பது ஒரு பெண்ணின் உடற்தொழிற்பாட்டில் ஏற்படும் இயல்பான மாற்றம்' என்பதைத் தெளிவாக விளங்கிக்கொண்ட பின்பும்கூட இத்தகைய காரியங்களில் கவனம் செலுத்துவது எப்படி?
தலைமுறை இடைவெளி 
மனித வாழ்க்கைக் காலத்தில் அன்றிலிருந்து இன்றுவரை தலைமுறைகளுக் கிடையிலான இடைவெளி நீண்டதாகவும் சிக்கல் வாய்ந்ததாகவுமே இருந்திருக்கின்றது. எனினும் அறிவியல் தொழில்நுட்ப வழி உருவான தொடர்புச் சாதனப்பயன்பாடும், பண்பாட்டுக் கலப்புகளும் இந்த முரண்பாட்டை ஒரு சில தசாப்தங்களாக மிகவும் சிக்கலாக்கியிருக்கிறது. மனித நடத்தைக் கோலங்களோ, வாழ்க்கைப் பாணியோ, சமூகப் பழக்க வழக்கங்களோ துரித மாற்றத்திற்கு உட்படும் அளவுக்கு தனிநபர் அனுபவங்களை குறிப்பாகப் பெற்றோரின் வாழ்வியல் அனுபவங்கள் - நடைமுறை வாழ்வுக்கான வழிகாட்டியாக ஏற்றக்கொள்ளும் மனப்பாங்கு உலகளாவிய ரீதியில் மிகவும் குறைவாகவே உள்ளது.
எந்தவொரு சமூகத்திலும் அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களின் வேகத்திற்கும் தலைமுறை இடைவெளியின் அளவுக்குமிடையே மிக நெருங்கிய தொடர்புண்டு. அதாவது இறுக்கமான பண்பாட்டு விதிகளைக்கொண்ட நம்மைப்போன்ற கீழைத்தேய சமூகங்களில் தனிநபர் ஒருவரின் சமூகப்பங்களிப்பு தெளிவாக வரையறுக்கப்பட்டிருப்பதனால் வாழ்க்கைமுறை தலைமுறைக்குத் தலைமுறை எவ வித சிக்கலுமின்றி கடத்தப்படுவதால் தலைமுறை இடைவெளி குறைவு என்றும் நவீன சமூகங்களில் தனிநபர் ஒருவருக்குப் பல தெரிவுகள் இருப்பதால் அங்கு அதிகம் என்றும் மானுடவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எமக்கு முந்திய தலைமுறையில் பருவம் அடைந்த காலப்பகுதியிலிருந்தே சிறியவர் பெரியவர், ஆகிவிடுவார் குறிப்பாக பெண் பிள்ளைகள் திருமணம் செய்து தாய்மைப்பருவத்தை 20 வயதுக்குள்ளேயே பெரும்பாலும் அடைந்துவிடுவர். ஆண் குழந்தைகள் தோட்டங்களில், தொழிற்சாலைகளில், வீடுகளில் மேலதிகப் பொறுப்பை எடுத்துவிடுவர். ஆனால் இன்று அப்படியல்ல.
இரண்டும் கெட்டான் பருவம் 
நவீன கைத்தொழில் சமூகம் ஒன்றின் உருவாக்கத்துடன் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்கள் இவர்களின் பொறுப்புக்களைச் சற்று பின் தள்ளிப் போட, சிறியவராகவும், இல்லாமல் பெரியவராகவும் மாறாமல் இருக்கும் 12-18 க்கு இடைப்பட்ட இரண்டும் கெட்டான் பருவமானது வளரிளம் பருவம் (ADOLESENCE) என 1904இல் G.STANLEY HALL என்பவரால் அடையாளப்படுத்தப்பட்டு இன்று தனிக்கவனம் எடுக்கப்படவேண்டிய ஒரு பிள்ளைப் பராயமாக்க கருதப்படுகிறது.
மனித வாழ்வின் ஏனைய பருவங்களைவிடவும் அதிக கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு பருவமாக வாழ்க்கைப் போக்கையே திசைதிருப்பக்கூடிய அபாயங்கள் நிறைந்த ஒரு பருவமாக வளரிளம் பருவம் கருதப்படுகிறது. சூழலில் காணப்படும் பொருட்களைத் தோண்டித் துருவி ஆயிரம் கேள்விகள் கேட்டு விடை கூறமுடியாமல் பெரியோரைச் சங்கடப்படுத்தும் குழந்தைப்பருவத்தில் இருந்து 'நான் யார்? எனக்கும் என் குடும்பத்திற்கும், எனக்கும் என் பாடசாலைக்கும், எனக்கும் என் சமூகத்திறக்கும் தொடர்பு என்ன?' என்று தன்னைத் தானே தோண்டித் துருவும் நிலைக்கு மாறும் ஒரு பருவம் இது. தான் யார் என்ற குழந்தையின் சிந்தனையும், குழந்தை யார் என்ற பெற்றோரின் சிந்தனையும், தன்னை அளப்பதற்கு குழந்தை தெரிவு செய்யும் இலட்சிய நபரும் இணைந்த ஒரு கலவையே வளரிளம்பருவ சிறுவனோ, சிறுமியோ ஆகும். மிகவும் குறுகிய ஒருகாலப் பகுதிக்குள் தன் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் (மார்பகவளர்ச்சி, ஆண்களின் உயர அளவின் வேகம், முடி வளர்தல்) தன் உடல் தொழிற்பாட்டில் ஏற்படும் மாற்றம் (மாதவிடாய் வட்டம் தொடங்குதலும், ஆணுக்கு விந்து வெளியேறுதலும்) தன் உளப் போக்கில் ஏற்படும் மாற்றம் என்பவற்றறுக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவை இப்பருவத்திற்கு உண்டு.
மிகவும் அபாயம் நிறைந்த இப்பருவத்தில் ஆளுமையையே சிதறடிக்கும் இந்தச் சாமத்தியச் சடங்கு ஆக்கபூர்வமான சமூகப்பிரசைகளை உருவாக்கிக் கொடுப்ப தற்கு பதில் ஆளுமை சிதைந்த, அடிமைத்தன வாழ்வுக்கே பெண்ணினத்தை மீண்டும் வழி நடத்திச் செல்லும்.
எங்கே நிற்கின்றோம்.? 
வாங்கப்படவும் விற்கப்படவும் கூடிய ஒரு பொருள்தான் பெண். பிள்ளை பெறும் பிரதான கருவியான இப்பொருள் கருவளம் அடைந்துவிட்டது என்பதை ஊரறியச் செய்யவேண்டிய தேவையும், இப்பொருளை எவ வித தீங்கும் வராமல் பாதுகாக்கும் வகையில் சடங்குகள் செய்வதும் அறியாமை மிகுந்த எமது மூத்த தலைமுறைக்கு அவசியமானதாக இருந்திருக்கக்கூடும். அதேபோன்று வெளியுலகம் தெரியாது, அறிவூட்டல் வாய்ப்புக்கள் அற்று சமையலறைக்குள் முடங்கிக் கிடக்கும் பெண்ணுக்கு பருவமடைதலும் அதன் வழி திருமணத்திற்குத் தயாராதலும் மகிழ்வூட்டக் கூடியதொன்றாகவும் இருந்திருக்கக்கூடும்.
ஆனால், இன்று அப்படியல்ல, அறியாமை இருளில் மூழ்கிக்கொண்டே எம்மை வழிநடத்திச் சென்ற எம் முன்னோரின் தடங்களைப் பின்பற்றிச் சென்ற காலகட்டத்திலிருந்து மெல்ல மெல்ல மாறி அறிவின் வாசல் அனைவரிற்கும் திறந்து விடப்பட்டிருக்கும் காலத்தில் நாம் நுழைந்து நீண்ட காலமாகிவிட்டது. எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும் உலக நடப்பைப் பக்கத்து வீட்டு வானொலி, தொலைக்காட்சி வழியாகவோ அல்லது சந்திக்குச்சந்தி நடக்கும் சங்கதி அலசல் மூல மோ பார்க்கின்றோம், கேட்கிறோம். தாம் நேரே பார்த்து அறியாத பொருட்களில் அதீத நம்பிக்கை வைத்து அதையே கண்மூடித்தனமாகப் பின்பற்றும் மூடத்தன வாழ்க்கையில் இருந்து தர்க்க hPதியாக காரண காரியத் தொடர்பை கண்டறிந்து அதன் வழி நடக்கத் தொடங்கிய வாழ்நிலைக்கு நாம் நுழைந்து நூற்றாண்டுகள் இரண்டைக் கடந்த பின்பும் புதுப்புது மூடத்தனத்திற்கு ஆளாவதை பார்க்கும்போது இன்று வளர்ந்துவிட்ட அறிவியல், மூடப் பழக்கவழக்கங்களை களைவதற்குப் பதிலாக மூடப் பழக்கத்தை மேலும் நவீன வடிவில் வெளிக்கொணர்வதற்கு உதவியிருக்கிறதல்லவா? அல்லது பயன்படுத்தப்பட்டிருக்கிறதல்லவா?
காட்டுமிராண்டிக்கால கட்டத்திலிருந்து இன்றைய அதி உச்சகட்ட நாகரீக வளர்ச்சிவரை எத்தனையோ இடர்பாடுகளை, வளர்ச்சிக்கட்டங்களை சந்தித்திருக்கின்ற மனித கமூகத்தின் சிந்தனை, வாழ்வைப் பண்படுத்தும் அம்சத்தில் ஏறுநிலையிலும் மனதைப் பண்படுத்தும் அம்சத்தில் இறங்கு நிலை நோக்கியும் நகர்ந்திருக்கின்றமையே வரலாறு தெளிவாக எடுத்துக்காட்டுவதுடன் பொதுநலத்தை மையப்படுத்திய வாழ்நிலை சுயநல நோக்குகளுக்குத்தாவிய காலம் முதற்கொண்டே மனப்பண்பாடு தேய்மானம் அடையத் தொடங்கிவிட்டது. சிறந்த திட்டமிடல், முகாமைத்துவம், நுண்ணறிவு என்பன நினைத்துப்பார்க்கமுடியாத மனித சாதனைகளுக்கு அடித்தளமிடும் அதேசமயம் மனதைப் பண் படுத்தும் முயற்சியைக் 'கண்டதே காட்சி, கொண்டதே கோலம்' என்ற வாசகம் ஆக்கிரமித்துவிட்டது.
புதுப்புது மூடத்தனங்களை உருவாக்கும் இத்தகைய ஆபத்தான நிலை அபிவிருத்தி நோக்கிய பாதையில் ஏற்கனவே நுழைந்துவிட்ட, நுழைந்து கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்தை மீண்டும் அடிமைத்தன சமூக அமைப்புக்குள் நிச்சயம் குப்புறத்தள்ளி விழுத்தும். இத்தகைய ஆபத்திலிருந்து சமூகத்தைக் காப்பாற்றும் ஒரு சமூகப் பொறுப்புணர்வை அறிவூட்டல் வாய்ப்பும், பொருளாதார வாய்ப்பும் ஒருங்கிணைந்த பெண்கள் சமூகமாவது சுமக்க இனியாவது முன்வருமா?
 நன்றி-பனிப்புலம்