Tuesday, August 30, 2011

புரியாத புதிராக மாறியுள்ள கிறீஸ் மனிதர்கள்....???

இன்று அனைவராலும் பரவலாக பேசப்படும் விடயம் “கிறீஸ்” மனிதர்கள். யார் இவர்கள் ?? எங்கிருந்து உருவாக்கப்பட்டார்கள்?? யாருக்கும் தெரியாத ஒரு புதிர். ஆனால் அவ்வாறான மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டவர்கள் பலர் உள்ளனர். ஆரம்பத்தில் இக் “கிறீஸ்” மனிதர்கள் இலங்கையின் மகியங்கனைப் பகுதியில் இருந்தே உருவாக்கப்பட்டனர். காரணம் அங்குள்ள “துட்டகைமுனு” மன்னன் காலத்து அவனால் பாவிக்கப்பட்ட பொருட்கள் எடுக்கும் நோக்கில் அவதரித்தவர்களே இவர்கள் என்ற செவிவழிக் கதை ஒன்று உலாவுகிறது. ஆனால் மகியங்கனையில் அவர்களின் அட்டகாசம் நடந்ததற்கான பதிவுகள் எதுவும் இல்லை. 

இதன் பிறகு அவ் மனிதர்களின் செயல்பாடு மலையகங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டது. அதுவும் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் இவர்களின் அடாவடித்தனம் இடம்பெற்றது. இதன் பிறகு இது இலங்கையின் வடக்கு கிழக்கிற்கு இடம்மாற்றம் பெற்றது. 

புதையல் எடுப்பதற்கென உருவாக்கப்பட்ட இவ் மனிதர்கள் எமது ஆர்வலர்களின் பார்வையில் அரசியல் ஆக்கப்பட்டது. “ மகிந்தரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதற்கு பரிகாரமாக ஒரு குறிப்பிட்ட தொகை பெண்களின் இரத்தம் தேவைப்படுவதாகவும் இதற்காகவே அப்படியான மனிதர்கள் உருவாக்கப்பட்டார்கள்” என்று இக் கதை தொடர்கின்றது. 

“ நாலு பேரின் இரத்தத்தை குடிச்சு தான் நீ உயிர் வாழ வேண்டுமா ?? ”  என்றாற் போல் அவரின் அன்பிற்குரிய தம்பி ஓர் அறிக்கை விட்டார்.. “ அண்ணணிற்கு இரத்தம் கேட்டால் கொடுப்பதற்கு ஆயிரம் பேர் இருக்கிறாங்க , எதுக்கு நாங்க இப்படி ஓரு கீழ்த்தரமான வேலைய செய்யனும்..” இவர் கதைக்கிறது உண்மையாக இருந்தாலும் இவரும் ஓர் அரசியல்வாதி என்பதால் என்னவோ இவரின் கதையை நம்புவதாக எவரும் இல்லை. சொல்லிப்பார்த்தார் கேட்கவில்லை... அடங்கிவிட்டார்...

தென் இலங்கையை பொறுத்தவரை இவரின் கூற்று ஏற்கத்தக்கது. மகிந்தருக்கு இரத்தம் கொடுக்க அவர்கள் வருவார்கள் என்பது அப்பட்டமான உண்மை.

உண்மையில் இந்த பூதங்களின் பின்னனி என்ன???  ஊரிலுள்ளவர்கள் இந்த பூத மனிதர்களை பிடிப்பதற்காக துரத்திச் செல்லும் போது அவர்கள் இராணுவமுகாம்களுக்குள் சென்று மறைவதாக சொல்கின்றார்கள். இதனால் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு இதனால் மக்கள் பெரிய இடர்களை அடைந்தது அனைவரும் அறிந்த ஓர் விடயம்.

இங்கு எனது அலசல் என்னவெனில் “மலையகங்களில் இந்த மனிதர்கள் புதையலை எடுப்பதற்கும்” “ வடக்கு கிழக்கில் இம் மனிதர்கள் மகிந்தருக்கு உயிர்ப் பிச்சை கொடுக்கவும் இரத்தம் எடுக்கிறார்களா??”

இராணுவ முகாம்கள் இல்லாத மலையகத்தில் இவர்கள் எங்கு சென்று ஒழிந்து கொள்கிறார்கள் ?? சிலவேளை மலையகங்களிலும் இராணுவ முகாம்கள் அமைப்பதற்காக இவ்வாறு செய்கிறார்களோ?? 

செய்யிறதுக்கு ஒரு வேலையும் இல்லாமல் சும்மா இருந்தா ஏதேதோ எல்லாம் நினைக்க தோன்றும். எங்களின் கற்பனைக் குதிரைக்கு கடிவாளம் போடவே முடியாது. அப்படித்தான் சிலபேரின் கருத்து..


“தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்”  மேலுள்ள பதிவினை வாசித்துப் பார்த்தால் இவர்களை பாராளுமன்றம் வரை அனுப்பிவிட்ட நாங்கள் அனைவரும் பைத்தியக்காரர்கள் என்று நினைக்கிறார் போலும். 

இப்படியானவர்கள் கைகளில் ஒரு தாளத்தைக் கொடுத்து கோயில்களில் பஜனை பாட அனுப்பி வைக்கலாம். நன்றாக தாளம் போடுவார்கள். 

இன்னொரு இணைப்பு இதோ...



(வடக்கில் “கிறீஸ்” மனிதர்களின் செயற்பாடு தொடங்குமுன் வெளியிடப்பட்ட கானொளி. நன்றி-youtube)

அமெரிக்க இராணுவப் பாணியில் இராணுவத்தின் இச்சையைப் போக்க இராணுவத்திற்கு அரசு வளங்கிய மானியமாம். அதற்கு எம் பெண்களின் இரதமா தேவைப்படுகிறது. உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களின் இரத்ததைக் குடிக்க வேண்டியது தானே.!!! எதுக்கு அடுத்தவன்ரைய எடுக்கிறீங்க. ஆக இப்படியான பலதரப்பட்ட கதைகள் உலாவிவருகின்றன. 

ஆனால் இந்த ஓர் மர்ம மனிதனை வைத்து தமது சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் போவது நிச்சயம். சிலகாலமாக யாழ்ப்பாணத்தில் இல்லாதிருந்த திருடர் கலாச்சாரம் மீண்டும் துளிர் விட்டுள்ளது. அண்மையில் யாழ் இணுவில் கந்தசுவாமி கோவிலில் திருடர் கும்பல் மக்களால் பிடித்து தாக்கப்பட்டுள்ளனர். 

தமது சொந்தப் பகைகளை பூர்த்தி செய்யவும் பெண்கள் மீது துஸ்பிரயோகம் செய்யவும் இந்த கிறீஸ் மனிதர்கள் நல்ல உதவி செய்யப்போகிறார்கள். இனி யார் என்ன செய்தாலும் அது கிறீஸ் மனிதர்கள் மேலே சென்றடையப் போகின்றது. இவ்வளவு காலமும் பயத்துடன் செய்து வந்த தவறுகள் அனைத்தும் இனி துணிச்சலுடன் நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை.

ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள்..???

அந்த இடத்தில் கிறீஸ் பூதம் வந்தது மக்கள் அதை துரத்தினார்கள் அது இராணுவ முகாமுக்குள் சென்றது என்ற கதைகளை விடுத்து.. ஏதாவது தாக்குதல் இடம்பெற்றிருப்பின் அப்படியான தாக்குதல் இடம்பெற்ற இடங்களில் உள்ள அரசினர் அல்லது தனியார் மருத்துவமனைகளில் தாக்குதலிற்கு இலக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்தார்களா?? இல்லையா?? என 
உறுதிப்படுத்திய பின் உங்கள் தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மக்களுக்கு தெளிவாக உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.

தொகுப்பு இ.சுகானன் சேர்க்கைகளுக்காக...