Thursday, July 29, 2021

ஆசிரியர்கள் ஏன் போராடுகிறார்கள்???

 *ஆசிரியர்கள் ஏன் போராடுகிறார்கள்???*


*(மாணவர்களே! பெற்றோர்களே!! சமூக நலன் விரும்பிகளே!!! கட்டாயம் இதை வாசித்து பாருங்கள்)*


இன்று ஆசிரியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபடுகின்றதை பலரும் ஊடகங்கள், சமூகவலைத் தளங்களினூடாக அறிந்திருப்பீர்கள். அவர்களின் போராட்டங்கள் தொடர்பாக பல தரப்பினரும் பல்வேறு விதங்களில் விமர்சிக்கிறார்கள். விமர்சனங்களை முன்வைக்கின்ற பலருக்கு ஆசிரியர்களின் கோரிக்கை/ பிரச்சினை என்னவென்றே தெரியாது. நான் அறிந்தமட்டில் அவர்களின் கோரிக்கை மிக நியாயமானதே! (சமூகவலைத் தளங்களில் பகிரப்பட்ட சில விடயங்களை வைத்தே நானும் அவர்களின் கோரிக்கை என்னவென்று ஓரளவு தெரிந்து கொண்டேன்.)


அவர்களின் பிரதான கோரிக்கை 23 வருடங்களாக (1997 முதல்) ஏற்படுத்தப்பட்ட சம்பள அளவுத்திட்ட முரண்பாட்டை நீக்குமாறு என்பதாகும். *(எம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் சம்பளத்தை அதிகரிக்கத்தான் போராடுகிறார்கள் என்று. ஆனால் உண்மை அவ்வாறில்லை. அவர்களுக்கு உரித்தானதைத் தான் அவர்கள் கேட்கிறார்கள்)* அரச தொழிலில் அவர்களின் தொழிற்துறை/ சேவைத் துறைக்கேற்ப அவர்களின் சம்பள அளவுத்திட்டங்கள் மாறுகின்றன. அதேவேளை குறிப்பிட்ட ஒரு தொழிலிலே அவர்களின் தரங்கள், தொழில் காலங்களுக்கு  ஏற்பவும் சம்பள அளவுத்திட்டங்கள் (Salary Scale) மாறுகின்றன. 1997 முதல் ஏற்படுத்தப்பட்ட முரண்பாடு காரணமாக உண்மையாக அவர்கள் பெற வேண்டிய தொகையைவிட குறைவான ஒரு தொகையைத்தான் 23 வருடங்களாக பெற்று வருகிறார்கள்.


இதை இன்னும் சற்று விரிவாக கூறுவதாயின், நீங்கள் ஒரு வீட்டை / கடையை வாடகைக்கு 23 வருடங்களுக்கு முன் ஒருவருக்கு கொடுத்துள்ளீர்கள். அவர் பொருந்திய தொகையைவிட 10% குறைவாக கடந்த 23 வருடங்களாக உங்களுக்கு தருகிறார். அதேநேரம் வாடகைத்தொகையும் 23 வருடங்களாகவும் ஒரே தொகையாகவும் இருக்காது. அதிகரிக்கின்ற வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப வாடகைத் தொகையையும் நீங்கள் அதிகரித்துக்கொண்டே செல்வீர்கள். எனவே 23 வருடங்களாக ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வரவேண்டிய ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் அதைக் கேட்காமல் சும்மா விட்டு விடுவீர்களாக?? (உங்களுக்கு வரவேண்டிய அந்த தொகை வாடகைத் தொகை அதிகரிப்பிற்கேற்ப(வாடகைத் தொகையின் 10%) அதிகரித்துக்கொண்டே செல்லும்). இவ்வாறான ஒரு நிலைதான் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


மேலுமொரு உதாரணம் கூறுவதாயின், நீங்கள் குறிப்பிட்ட ஒரு தொகை மாதாந்த சம்பளத்திற்கு ஒரு நிறுவனத்தில்/ கடையில் 23 வருடங்களுக்கு முன் இணைந்துள்ளீர்கள். ஆனால் உங்கள் முதலாளி பொருந்திய தொகையைவிட குறிப்பிட்ட வீதம் (உதாரணத்திற்கு 10% என எடுத்துக்கொள்வோம்) உங்களுக்கு குறைவாக தருகிறார். இவ்வாறு 23 வருடங்களாக நடப்பதை நீங்கள் சும்மா விட்டுவிடுவீர்களா???


மேலும் கணித்தலுடன் கூறுவதாயின் உங்களது ஆரம்ப சம்பளம் 20,000/- வுடன் 23 வருடங்களுக்கு முன் ஒரு தொழில் இணைந்து உள்ளீர்கள். அதேவேளை 5 வருடங்களுக்கு ஒருமுறை உங்கள் சம்பளம் 5,000/- வினால் அதிகரிக்கின்றது எனவும் வைத்துக்கொள்வோம். அத்துடன் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக உங்களுக்கு வரவேண்டிய சம்பளம் 10% குறைவாகத்தான் கிடைக்கின்றது என வைத்துக்கொள்வோம்.


முதல் 5 வருடங்களில் நீங்கள் இழக்கும் தொகை 2000 × 12× 5= 120,000/-


அடுத்த 5 வருடத்தில் 2500× 12×5 = 150,000/-


அடுத்த 5 வருடத்தில் 3000 × 12×5= 180,000/-


அடுத்த 5 வருடத்தில் 3500 × 12×5 = 210,000/-


இறுதி 3 வருடத்தில் 4000× 12×3= 144,000/-


ஆகவே 23 வருடங்களில் நீங்கள் இழக்கும் மொத்த தொகை (120,000 + 150,000 + 180,000 + 210,000 + 144,000 ) *804,000/-* 


இத்தொகையை சும்மா விட்டு விடுவீர்களா?? இப்ப சொல்லுங்கள் ஆசிரியர்களின் போராட்டம் நியாயமானதா? இல்லையா??


மேலே காட்டிய கணக்கு ஒரு உதாரணத்திற்கே. அதைவிட கூடுதலான தொகையை ஒவ்வொரு ஆசிரியர்களும் இழந்துள்ளார்கள். அத்தொகை அவர்களின் தரங்கள், தொழில் கால அளவுக்கு ஏற்ப வேறுபடுகின்றது. மேற்படி சம்பள அளவுத்திட்ட முரண்பாடு காரணமாக தற்போது ஒவ்வொரு ஆசிரியர்களும் அதிபர்களும் அவர்களின் தரங்களுக்கு ஏற்ப தாம் பெறவேண்டிய தொகையை விட சுமார் 9,000 - 31,000/- இடைப்பட்ட ஒரு தொகையை ஒவ்வொரு மாதமும் குறைவாக பெறுகிறார்கள். *(ஒவ்வொரு மாதமும் அவர்களின் அத்தொகையை 23 வருடங்களாக மாறி மாறி வரும் அரசாங்கங்கள் சூரையாடியுள்ளது).* இந்த முரண்பாட்டை தான் நீக்குமாறு அவர்கள் வேண்டுகிறார்கள். *அதுவும் அவர்களுக்கு உரித்தான 23 வருடங்களாக சூரையாடப்பட்ட இலட்சக்கணக்கான பணத்தை தருமாறு அவர்கள் வேண்டவில்லை. மாறாக அடுத்த மாதத்திலிருந்து சரி இப்பிரச்சினையை தீர்த்து அவர்களுக்கு உரித்தான சம்பளத்தை அடுத்த மாதம் தொடக்கம் சரியாக தருமாறுதான் வேண்டுகிறார்கள்.*


ஒரு ஆசிரியரின் FB பதிவொன்றிலிருந்து கிடைத்த தரவை மேலும் தெளிவுக்காக இங்கே பதிவிடுகின்றேன்.


அவ்வாசிரியர் 2011-08-19 ம் திகதி முதல் ஆசிரியராக நியமனம் பெற்றுள்ளார். அன்றிலிருந்து முதல் மூன்று வருடங்கள் (2014-08-19 வரை) ஒவ்வொரு மாதமும் 10,304/- குறைவாக கிடைத்துள்ளது. ஆகவே 3 வருடங்களில் அவர் இழந்த தொகை (3×12×10,304) *370,304/-*


2014-08-19 தொடக்கம் 2021-07-19 இம்மாதம் வரை 6 வருடங்களும் 11 மாதங்களும் ஒவ்வொரு மாதம் அவர் இழந்தது 14,315/- ஆகும். எனவே இவ் 83 மாதங்களில் அவர் இழந்த மொத்த தொகை (83× 14,315) *1,188,145/-*


ஆகவே அவருடைய நியமனம் முதல் இன்று வரை அரசாங்கங்கள் அவருக்கு வழங்க வேண்டிய அவர் இழந்த மொத்த தொகை *1,559,089/-* *(15 இலட்சத்து ஐம்பத்தொன்பதாயிரத்து எண்பத்து ஒன்பது ரூபா)*


அவ்வாசிரியர் அரசாங்கத்திடம் அந்த 15 இலட்சத்தை கேட்கவில்லை. அடுத்த மாதம் தொடக்கம் அவருக்கு உரித்தான 14,315/- வை சம்பளத்துடன் சேர்க்குமாறே!!


*இவற்றை முழுமையாக வாசித்து விளங்கியவர்கள் ஆசிரியர்களின் போராட்டத்தை இனி கொச்சைப்படுத்தமாட்டார்கள் என நினைக்கிறேன்.


அவர்கள் 23 வருடங்களாக இதற்காக போராடுகிறார்கள். மாறி மாறி வரும் அரசாங்கங்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறுகிறார்கள். என்னுடைய பார்வையில் இனியும் அவர்களை இலகுவில் ஏமாற்ற முடியாது. அவர்கள் 23 வருடங்களாக ஏமாறி அனுபவம் பெற்றுள்ளார்கள்.


சிலர் இச்சந்தர்ப்பம் போராட பொருத்தமற்றது என்றும் இன்னும் சிலர் ஆசிரியர்களுக்கு விடுமுறை, ஓய்வு நேரம் அதிகமென்றும் ஆசிரிய தொழிலை கேவலப்படுத்துகிறார்கள். அதற்கான விரிவான பதிலை அடுத்த ஆக்கமொன்றில் எழுத முயற்சிக்கிறேன்.


இஃது

ஆசிரியர்களின் உன்னத சேவையை உணர்ந்த/ பெற்ற வெற்றியாளன்.

COPIED

Saturday, July 24, 2021

இதில் யார் பணக்காரன்

 ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..!

சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..!
இதில் யார்_பணக்காரர்...?!!
3 'ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீ்ட்டு 6 மாத குழந்தையின் அம்மா,
ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் வேண்டும் என்று கேட்கிறார்,
அதற்கு அந்த மேலாளர் பாலுக்கு நீங்கள் தணியாக பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் பணத்தை செலுத்தி பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்..!
ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,
டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...!!..
பணம் உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......!!!
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....!
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.
சுயநலம் என்பது கால்பந்து போன்றது.
இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.
ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது.
மற்றொன்று உதைக்கப் படுகின்றது.
தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது.
ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.
சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.

- படித்ததில் பிடித்தது -

Tuesday, July 20, 2021

கற்றது கையளவு கல்லாதது உலகளவு


 சந்தைக்கடையில் இரண்டு பையன்கள் மீன் விற்றுக் கொண்டிருந்தனர். வியாபாரம் மிகவும் மந்தமாகத் தான் இருந்தது.*

சற்று நேரம் கழித்து ஒரு வாடிக்கையாளர் வந்தார். முதல் பையனிடம் சென்று மீன் விலை விசாரித்தார். “ஒரு கிலோ 1௦௦ ருபாய் ஆகும், சார்,” என்று அவன் கூறினான். சற்று தூரத்தில் இரண்டாவது பையனும் அதே வகை மீனை வைத்துக் கொண்டிருந்ததால், அவனிடம் சென்று இந்த விலைக்குக் குறைவாகக் கொடுக்கச் சொல்லி, பேரம் பேசி வாங்கலாம் என்று நினைத்து அவனை அணுகினார். விலை என்னவென்று விசாரித்த போது, அவனோ, “ மீன் விலை ஒரு கிலோ 5௦௦ ருபாய் ஆகும், சார்,” என்று கூறினான். விலையைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போன அவர், “ என்னப்பா இது ? அந்தப் பையனும் இதே மாதிரி மீன் தான் வைத்திருக்கிறான். அவன் விலை 1௦௦ ருபாய் என்று சொல்கிறான். நீ அதே மாதிரி மீனுக்கு விலை 5௦௦ ருபாய் என்று சொல்கிறாயே. இது நியாயமா?” என்று வினவினார். அந்தப் பையனோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்: “ சார், பார்க்கத் தான் இரண்டும் ஒரே மாதிரியாகத் தெரியும். ஆனால் என்னுடைய மீன் மிகவும் விசேஷமானது. அதனால் தான் கூடுதல் விலை,” என்றான். “அப்படி என்னப்பா விசேஷம் உன் மீனில் இருக்கிறது?” என்று கேட்டார் வாடிக்கையாளர். “சார், இது புத்திசாலியான மீன். இதைச் சாப்பிடுபவர்களும் நாளடைவில் புத்திசாலியாகி விடுவார்கள். அதனால் தான் இவ்வளவு விலை,” என்றான் பையன். “உண்மையாகவா ?” என்று வியந்தார் வாடிக்கையாளர். “வாங்கிப் பாருங்கள், சார், உங்களுக்கே தெரியும்,” “சரி,சரி, ஒரு கிலோ கொடு. ‘ட்ரை’ பண்ணிப் பார்க்கிறேன்”, என்று சொல்லி, ஒரு கிலோ மீனை 5௦௦ ருபாய்க்கு வாங்கிச் சென்றார். அடுத்தடுத்து தொடந்து 6 நாட்களுக்கு அதே மீனை அதே பையனிடம் அதே விலைக்கு வாங்கிச் சென்று சாப்பிட்டு வந்தார். புத்திசாலித்தனத்தில் ஏதாவது முன்னேற்றம் ... ? ம்ஹும். ...! எதுவும் தெரியவில்லை. அப்போது தான் அவருக்குப் புரிந்தது “புத்திசாலி மீன்” என்று அந்தப் பையன் சொன்னது எல்லாம் வெறும் பித்தலாட்டம் என்று. கடுமையான கோபம் வந்து விட்டது அவருக்கு. ‘இன்று அவனைப் போய் ‘உண்டு அல்லது இல்லை’ என்று ஆக்கி விட வேண்டியது தான் என்ற தீர்மானத்துடன் சந்தைக்குச் சென்றார்.. அந்தப் பையனிடம் சென்று, தன் கோபத்தை வெளிக்காட்டாமல், “என்னப்பா, அந்த புத்திசாலி மீன் இருக்கா? ”, என்று இவர் கேட்க, இவரின் கோபத்தைப் புரிந்து கொள்ளாமல் அவனும், “ ஓ, இருக்கே. உங்களுக்காகவே தனியாக எடுத்து வைத்திருகிறேனே ! ”, என்று உற்சாகமாகக் கூறினான். வந்ததே கோபம் அவருக்கு ! “அயோக்கியப் பயலே! என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய் ? உன் பேச்சைக் கேட்டு ஒரு வாரமாக நானும் அந்த மீனை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்து விட்டேன். அணுவளவும் முன்னேற்றம் இல்லை. புத்திசாலி மீனும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது. என்னை ஏமாற்றி விட்டாய். உடனடியாக என் பணத்தையெல்லாம் திருப்பித் தந்துவிடு. இல்லையென்றால் உடனடியாகப் போலீசைக் கூப்பிட்டு விடுவேன்”, என்று கத்தினார். பையனோ அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னான்: “ சார், இங்கே பாருங்க. இதே மீனை புத்திசாலி மீன் என்று நான் ஒரு வாரத்திற்கு முன்னால் சொன்ன போது நீங்கள் ஆட்சேபிக்கவேயில்லை. இப்போ பாருங்க, ஒரு வாரத்திலேயே இது புத்திசாலி மீன் இல்லை என்று நீங்களே கண்டு பிடித்து விட்டீர்கள். அப்படி என்றால் தற்போது நீங்கள் புத்திசாலி தானே சார்.. என்ன பிரமாதமான முன்னேற்றம்! இதைப் போய் முன்னேற்றம் இல்லை என்று சொல்கிறீர்களே, சார் ! தொடர்ந்து சாப்பிடுங்க, சார். இன்னும் பிரமாதமான முன்னேற்றம் கிடைக்கும்.” வாடிக்கையாளர் வாயடைத்து நின்றார். கற்றது கையளவு கல்லாதது உலகளவு.

படித்ததில் பிடித்தது

Friday, July 16, 2021

அறிவுக்கும் கல்விக்கும் சம்மந்தம் இல்லை

 ஒரு ஊரில் சமையல்காரர் ஒருவர் வசித்து வந்தார் பெயர், ராமு. அவர் சமையல் எந்த அளவுக்குச் சுவையானதோ அந்த அளவிற்கு இனிமையானவர். அந்த ஊரில் அவரை அனைவருக்கும் பிடிக்கும் அத்தகைய பண்பாளன். ராமு சிறு வயது முதலே பல கஷ்டங்களை எதிர்கொண்டான்.

சிறு வயதிலே தன் பெற்றோர்களை ஒரு விபத்தில் இழந்துவிட்டான். நன்றாகப் படிக்கும் மாணவன் எனினும் அன்றாட தேவைக்குக் கூடப் பணம் இல்லாததால், பள்ளி படிப்பைப் பாதியிலே கைவிட்டான். தனக்கு தெரிந்த சமையலை தொழிலாக மாற்றிக் கொண்டான். தற்போது 50 வருடங்களாகக் கோவில் மற்றும் வீட்டு விசேஷங்களுக்குச் சமைத்து பரிமாறி வருகிறான்.
அவருக்கு ஒரு பெண் குழந்தை, அமுதா வயது 20. தனக்கு பண கஷ்டம் அவ்வப்போது இருந்தாலும், அதை என்றும் தன் மகளிடம் காட்டிக் கொண்டதில்லை. எந்தக் காரணத்தால் அவன் கல்வி தடை பட்டதோ அதே போன்ற பாதிப்பு தன் மகளுக்கு வரக் கூடாது என ஊரிலே சிறந்த பள்ளியில் படிக்க வைத்தான்.

அமுதாவின் புலம்பல்

அமுதா மிகவும் நன்றாகப் படிப்பாள், வகுப்பில் என்றுமே முதல் மதிபெண் பெற்று தேர்ச்சி அடைவாள். அப்பாமீது அதிக அன்பு கொண்டவள் ஆனால் அவரைவிட அதிகம் படித்தவள் எனக் கொஞ்சம் ஆணவமும் கொண்டிருந்தாள்.

’எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம். இந்தச் சின்ன வயதில் எனக்கு இவ்வளவு கடினமான சூழ்நிலையா’ என அமுதா அடிக்கடி புலம்பிக் கொண்டே இருந்தாள். அவற்றை ராமு கவனித்துக் கொண்டே வந்தான்.

‘ஒரு பிரச்சனை முடிந்தால் இன்னொரு பிரச்சனை வந்துவிடுகிறது. இதற்கு ஒரு முடிவே இல்லையா? என்ன வாழ்க்கை இது?’ என நாளுக்கு நாள் அவள் புலம்பல் இன்னும் அதிகரித்து கொண்டிருந்தது.

ஒரு நாள் ராமு அமுதாவை அழைத்து, ‘ஏன் அம்மா இப்படி புலம்பிக் கொண்டே இருக்கிறாய்? கஷ்டங்கள் அனைவருக்கும் பொதுவானது தான். வாழ்க்கை என்றால் கஷ்டங்கள் இருக்கதான் செய்யும். இதற்காக வாழ்கையை வெறுக்கக் கூடாது’ எனப் புரிய வைக்க முயன்றான்.

‘இல்லை அப்பா, உங்களுக்கு ஒன்னும் தெரியாது. இந்தக் காலத்துல எங்களுக்கு 1008 பிரச்சனை இருக்கு. அதெலாம் சொன்ன உங்களுக்குப் புரியாது. நீங்க இன்னும் உங்க காலத்துலையே இருக்கீங்க’ என்றாள் அமுதா.

‘காலம் என்னம்மா காலம், கஷ்டங்கள் என்றும் ஒன்று தான். சொல்லப் போனால் அன்று எனக்குக் கிடைக்காத பல இன்பங்களும் வாய்ப்புகளும் இன்று உங்களுக்கு மிகவும் எளிமையாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நாம் என்றும் வாழ்வின் இன்பங்களை எண்ணி பார்க்க வேண்டும் துன்பங்களை அல்ல’ என்று மீண்டும் புத்தி மதி கூற முயற்சித்தான்.

‘அப்பா சமையல் போல எல்லாம் எளிதுன்னு நினைக்காதீங்க. உங்களுக்கு ஒன்னும் தெரியாது’ எனக் கூறினாள் அமுதா. அவள் கொண்ட ஆணவம் ராமு கூறும் உண்மைக்குச் செவி சாய்க்க விடாமல் அவளைத் தடுத்தது.

மூன்று பொருட்கள்

ராமுவிற்கு புரிந்து விட்டது, இனி அமுதாவிடம் பேசிப் பயன் இல்லை என்று. ‘சரி அம்மா. எனக்குப் புரியவில்லை தான். என்னுடன் சமையல் அறைக்கு வா’ என அமுதாவை அழைத்துச் சென்றான் ராமு.

அடுப்பில் மூன்று பாத்திரங்களை வைத்தான். அதில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைத்தான். ‘என்ன அப்பா செய்றீங்க? எதற்கு என்ன கூட்டிட்டு வந்தீங்க? படிக்க நிறைய இருக்கு நான் போகணும்’ எனப் பொறுமையின்றி தவித்தாள்.

‘சிறிது நேரம் பொறு அமுதா’ என அவளை நிதானப் படுத்தினான் ராமு. ஒரு உருளைக்கிழங்கு ஒரு முட்டை மற்றும் சிறிது காபி கொட்டைகளை எடுத்து வந்தான். ‘அமுதா இந்த மூன்றையும் ஒரு ஒரு பாத்திரத்தில் போடு’ என மூன்று பொருட்களையும் அமுதாவின் கையிலே கொடுத்தான். கொத்திக்கும் நீரில் மூன்று பொருட்களையும் போட்டபின், அடுப்பின் தீயை இன்னும் அதிக படுத்தினான் ராமு. சிறிது நேரம் கழித்து மூன்று பாத்திரங்களையும் எடுத்து உள்ளே போட்ட பொருட்களைத் தட்டில் வைத்தான்.

‘அமுதா, இதோ இந்த உருளை கிழங்கு இப்பொழுது எப்படி உள்ளது’ என ராமு கேட்க, ‘மென்மையாகி விட்டது அப்பா’ என்றாள் அமுதா.

‘இந்த முட்டை?’

‘கீழே போட்டால் உடையும் முட்டை, இனி உடையாதது போல அதன் புற பகுதி வலு பெற்று உள்ளது அப்பா.’

‘சரி அமுதா அந்தக் காபியை ஊற்று’

இருவரும் காபியை ஊற்றிக் குடித்தனர். காபியின் சுவை அமுதாவிற்கு இன்பம் அளித்தது.

‘இது எப்படி உள்ளது?’ கேட்டான் ராமு.

‘மிகவும் அருமை அப்பா’ அமுதா சிரித்துக் கொண்டே கூறினாள்.

‘இது தான் வாழ்க்கை அமுதா. வாழ்கையின் துன்பங்கள் வெந்நீரை போலச் சுடும். நாம் கடுமையாக அந்த உருளைக் கிழங்கைப் போல இருந்தால் மென்மையாகி விடுவோம். மென்மையான முட்டையைப் போல இருந்தால் கடுமையாகி விடுவோம். ஆனால், அந்தக் காபி கோட்டைகள்போல வெந்நீரோடு கலந்து அவற்றை ஏற்றுக் கொண்டால், வாழ்க்கையே சுவையாகி விடும். நீ எதைத் தேர்ந்தெடுக்க போகிறாய்?’ என்றான் ராமு.

‘காபி கோட்டைகள். அதுவே வாழ்கையை மகிழ்ச்சியாக வாழுவதற்கு வழி, உணர்ந்துக் கொண்டேன்.


உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியதற்கு மன்னித்து விடுங்கள் அப்பா. அறிவுக்கும் கல்விக்கும் சம்மந்தம் இல்லை. நீங்கள் தான் சிறந்த அப்பா!’ எனத் தன் தவறை உணர்ந்து வாழ்வின் உண்மையான ரகசியத்தை மனதால் ஏற்றுக் கொண்டாள் அமுதா.

படித்ததில் பிடித்தது

Sunday, July 4, 2021

யூதர்களின் வரலாறு-01


1972 இல் ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக்சில் 11 இஸ்ரேல் விளையாட்டு வீரர்களும் அவர்களின் பயிற்றுனர்களும் பாலஸ்தீன "கருப்பு செப்டெம்பர்" குழுவால் கொல்லப்பட்டதும், அதன் பின்பு இடி அமீன் காலத்தில் 1979 இல் நடந்த ஒப்பரேஷன் எண்டபே யும் நான் சிறுவனாக இருந்த காலத்தில் நடந்தன. அது பற்றிய செய்திகளும் திரைப்படங்களும் எனக்கு இஸ்ரேல் பற்றி அறியும் ஆவலை தூண்டியது.

எனது அம்மாவிடம் இருந்த டைம்ஸ் அட்லஸ் என்னும் உலக வரைபடங்ககள் உள்ள புத்தகத்தை புரட்டிப்பார்த்தால் அதில் இஸ்ரேல் என்றொரு நாடே இருக்கவில்லை! ஆம் எனது அம்மா படித்தபோது இஸ்ரேல் என்றொரு நாடே இருக்கவில்லை!
சில வருடங்களுக்கு முன்பு இஸ்ரேல் நாட்டுக்கு சென்று வந்ததில் இருந்து யூதர்களைப்பற்றியும், இஸ்ரேல் நாட்டின் உருவாக்கம் அதன் வளர்ச்சி பற்றியும் ஒரு தொடர் எழுதலாம் என்று நினைத்தாலும் நேரம் ஒதுக்குவது கடினமாக உள்ளது.
யூதர்களைப்பற்றி எழுதவேண்டும் என்றால் கி மு 2000 ஆண்டளவில் ஆபிரகாமின் தோற்றத்தில் இருந்து ஆரம்பித்து கிறிஸ்துவின் இறப்பின் பின்பான, நாடோடிகளாக அலைந்து திரிந்த, 2000 ஆண்டுகளைப்பற்றி எழுதவேண்டும். 1948இல் இஸ்ரேல் தோற்றம் பெற்றாலும் அதற்கான ஆயத்தங்களை 19ம் நூற்றாண்டில் ஆரம்பித்து alliah என்ற ஜெருசலேமுக்கு போய் குடியேறும் முறையுடன் ஆரம்பித்திருந்தார்கள். அதன் பின்பு 1964 இல் PLO ஆரம்பிக்கப்பட்டதும், 1967இல் நடந்த 6 நாள் போரும் முக்கியமானவை.
இன்று 50% ஆன உலக யூதர்கள் இஸ்ரேலுக்கு சென்று குடியேறிவிட்டார்கள். ஒரு கோடி சனத்தொகை உள்ள இஸ்ரேலில் 75% யூதர்களும் 20% முஸ்லிம்களும் 2% கிறிஸ்தவர்களும் வாழுகின்றனர். வரப்போகும் எனது தொடரை வாசிக்க பொறுமையில்லாதவர்கள் கீழுள்ள வீடியோவை பாருங்கள்.
Kumaravelu Ganesan
20.05.2021