Saturday, September 10, 2011

இவர்களையும் காதலிப்போம்.

வயது கொள்ளும் விபரீத ஆசைகள், ஒவ்வொரு பருவத்திலும் ஒன்றின் மேல் ஆசை, இது தான் மனித இயல்பு. மீசை அரும்பும் வயதில் வெவ்வேறு ஆசைகள் தோன்றும். அது எமது உடம்பு ஏற்படுத்தும் பரினாமத்தின் வளர்ச்சி.     உடம்பின்பரினாமத்திற்கேற்ப மனதும் மாறுதலடையும். 

வீட்டாரின் அரவணைப்பில் இருந்து விலத்தும் போது பல தரப்பட்ட நண்பர்களின் சேர்க்கைகளுக்கிடையில் மனம் முட்டி மோதி தனக்கேற்றால் போல் வியூகம் அமைத்து தன் போக்கில் செல்ல எத்தனிக்கும். 

தன்னைச் சுற்றி நடப்பவற்றை வித்தியாசமாக பலதரப்பட்ட கோணங்களில் உற்று நோக்கும். நல்லவை பெரும்பாலும் கண்ணுக்குப் புலப்படாது. தேவையற்றதையே மனம் நாடும். அதற்குள் செல்லவே குரங்கு மனம் எத்தனிக்கும். யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாது. பட்டு புத்தி வரும் வரை சித்தம் தெளியாது.

பிறர் செய்வதைப் போலவே தானும் செய்ய ஆசைப்படும். தனக்காக தன்னைப் பற்றி சிந்திப்பதை நிறுத்தி மற்றவர்கள் தன்னை என்ன நினைப்பார்களோ என நினைத்து மற்றவர்களுக்காக வாழத் தொடங்கும். 

கட்டுக்கடங்காத மனது, கடிவாளம் போட நினைத்தாலும் போடுவதற்கு முடியாது. எங்கள் மனதோடு போட்டியிட்டே எமது மனமே தோற்றுவிடும். இது காதலிற்கே சாத்தியமாகும். 

தன்னை மறந்து, தனைப் பெற்றவரை மறந்து, தன் உடன் பிறப்புகளை மறந்து அதுமட்டுமா தன் நண்பர்களையும் பிரிந்து அறிமுகமில்லாதவளுக்காக அலையில் அடிபட்ட துரும்பு போல சக்தியற்று பித்தனைப் போல திரிவதும் காதலுக்கு மட்டுமே சாத்தியமானது.

கண்டவுடன் காதல், காணாமல் காதல் இந்த இரண்டிலுமே உடன்பாடு இருந்தாலூம் தனது காதலை வெளிப்படுத்தும் முன் தன் குடும்பத்தை நினைக்காமல் எவனும் இருக்கமாட்டான் என்பதே எனது கருத்து. இதனை எவராலும் மறுக்க முடியாது.அவ்வாறு மறுப்பவன் மனிதனாக இருக்க முடியாது.

ஆனால் காதல் என்ற போதையில் இலட்சக்கணக்கான நரம்புகளின் தூண்டுதலில் பாச நரம்புகள் செயல் இழந்து போய்விடுமோ???  இருக்காது என்பது தான் என் எண்ணம்.  உங்கள் பார்வையிலும் இவ்வாறே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. 

சரி!!! காதலும் ஆகிவிட்டது... மாணவப்பருவம் காதலின் வசந்தகாலம். கண்முன் தெரியாமல் காதல்வயப்படும். எதைப் பற்றியும் யோசிக்காது. தங்கள் சந்தோசத்தையே பெரிதாக நினைக்கும். எதிர்ப்புகள் வந்தாலும் எதிர் நீச்சல் அடிப்போம் என்று சொல்லிச் சொல்லி தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும். 

ஒன்று மட்டும் எம்மை நாமே கேட்க வேண்டும். (மாணவப் பருவத்தில்) சொந்தச் செலவில் காதலியை அலங்கரித்திருப்பீர்கள். அப்படி அலங்கரிக்கும் உரிமையை யார் தந்தது நமக்கு...??? எனக்கே சொந்தமில்லாத காசில் அவளுக்கு நான் எவ்வாறு பொருட்களை வாங்கித்தர முடியும். சரி!!! பெரியவர்கள் சொல்வார்கள் இருப்பதை மற்றவனுக்கும் கொடு அது உனக்குத் தானாக வரும் என்று!!! பெரியவர்கள் கூற்று மதிக்கத் தான் வேண்டும், ஆனால் எனக்கே சொந்தமில்லாத பொருளை எவ்வாறு நான் பகிர்ந்து கொள்ள முடியும். 

ஆக!!! பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு சொல்வதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கும்.  படிக்கச் செல்லும் மகன் ஒருத்தியுடன் ஊர் சுற்றுகிறானாம் என்று கேட்டவுடன் தாய் மனம் எவ்வளவு பாடுபடும். அப்பா எவ்வளவு கஸ்ரவப்படுவார். உழைப்பவனுக்குத் தான் தெரியும் 1 ரூபா உழைப்பதே எவ்வளவு கஸ்ரம் என்று. 

காதலிக்க முன்பு ஒருவன் இவ்வாறு யோசிப்பான் ஆயின் காதலில் ஆசை இருந்தாலும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வான். தன் பிள்ளையின் காதல் விளையாட்டுக்கள் தெரிந்தும் தெரியாது இருக்கும் பெற்றோரும் இருக்கின்றனர். அதை பெரிய விடயமாக்கும் பெற்றோரும் இருக்கின்றனர். அது பெற்றவர்கள் மன நிலையைப்பொறுத்தது.

இதுவரை காலமும் நாம் சொன்னதைத் தானே செய்தான் இதையாவது அவன் விருப்பத்திற்கு செய்யட்டும் என்று விட்டு விடும் பெற்றோரும் உண்டு. இவ்வளவு காலமும் என்ன செய்ய வேண்டும் என்று செய்த எமக்கு இதை செய்யத் தெரியாதா என்று நினைக்கும் பெற்றோரும் உண்டு.

அது அவர்களின் சுயநலம் என்று கூடச் சொல்லலாம். ஆனாலும் தோளுக்கு மேல் வளர்ந்தாலும் பெற்றவர்களுக்கு குழந்தை குழந்தை தான். அனைத்து பெற்றோருக்கும் இருக்கும் பயம் இது வரைக்கும் எல்லா நல்லது கெட்டதும் நாம் தான் செய்து விட்டோம். சுயமாக அவன் எடுக்கும் முடிவில் பிழை விட்டு விடுவானோ என்ற பயத்தின் மேலீட்டாலேயே மறுப்புக்கள் தோன்றுகின்றன. 
மற்றும், பிள்ளை பிறந்து 1 ஆவது பிறந்தநாளில் இருந்து ஒவ்வொரு தினத்திற்கும் தம் விருப்பத்திற்கு அழகு பார்த்தவர்கள் தம் பிள்ளை மணநாள் காணும் போதும் தம் விருப்பத்திற்கே அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். இது யதார்த்தமாக அனைவருக்கும் வரும் ஆசையே.

அனைவருக்கும் வரும் காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை. ஆனால் அது எனக்கு அமையவில்லை. ஆனால் அது கைகூடாதற்கு கடவுளுக்கு இப் பொழுது நன்றி கூறுகின்றேன். அம்மாவுடன் எப்போதும் ஜோக்காக கதைப்பது வழக்கம். அவ்வாறு கதைக்கும் போது தான் என் தாய் என் எதிர்காலக் கனவினை வெளிப்படுத்தினார். என் எதிர்காலம் அவர் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.  அதைக் கலைத்தால் அந்த தாய் என்னும் ஓவியமே சிதைந்து விடும். அப்படியோர் பாவத்தினை செய்ய இனி மேலும் என் மனம் இடம் கொடுக்காது.

அனைவருக்கும் நான் தரும் அன்புக் கட்டளை. முடிந்தவரை உங்கள் பெற்றோரிடம் வாய் விட்டுக் கதையுங்கள். அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்ய இயன்றவரை போராடுங்கள். எமக்காக தம்மை தியாகம் செய்தவர்களிற்காக எமது அற்ப ஆசைகளை தியாகம் செய்வதில் எந்த வித நட்டமும் ஏற்பட்டுவிடாது. 

                              “ அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ”
பெற்றவர்களின் ஆசையை நீங்கள் நிறை வேற்றுங்கள் உங்கள் ஆசைகள் தெய்வத்தால் நிறை வேற்றப்படும்.


இந்தப் பதிவு பெற்றோரை கடவுளாக மதிப்போர்களுக்காக எழுதப்பாட்டுள்ளது.
இயன்றவரை இந்த பதிவை பிரபல்யப்படுத்துங்கள்.
நன்றி- சேர்க்கைகளுக்காக இ.சுகானன்
 


Thursday, September 8, 2011

தண்ணீர் தேசம்...........2

தமிழ்ரோஜா

அதைவிட சுகமாக
அம்சத்வனிராகம்கூட அவள்
பெயரை உச்சரித்திருக்க
முடியாது.

காதல் அழைக்கும் போதுதான்
பெயர்வைத்ததன்
பெருமைபுரிகிறது.

அந்த சுகம் மீண்டும் அவளுக்கு
வேண்டியிருந்தது. அதனால்
உம் கொட்டாமலிருந்தாள்.

தமிழ்ரோஜா

- இப்போது அவன் அழைத்தது
தோடிராகம்.

உம் என்றாள் தமிழ்.

தண்ணீருக்கு நீ பயந்தால்
உன்னைக்கண்டு நீயே
பயப்படுகிறாய் என்று
அர்த்தம்.

புரியவில்லை.

உன் உடம்பு என்பதே
முன்றில் இரண்டுபங்கு தண்ணீர்.
உன் அழகுதேகம் என்பது 65
சதம் தண்ணீர்.

மெய்யாகவா?

தமிழிடம்
பொய்சொல்வேனா?
விஞ்ஞானம் விளம்பக்கேள்...
வாழும் உயிர்களை
வடிவமைத்தது தண்ணீர்.
70 சதம் தண்ணீர் - யானை.
65 சதம் தண்ணீர் - மனிதன்.
என் அமுதமே. உன் உடம்பில்
ஓடுவது 7.2 லிட்டர் உப்புத்
தண்ணீர்.

நம்ப முடியவில்லை.

உண்மைக்கு உலகம்வைத்த
புனைபெயர் அதுதான்.

உடம்பில் ஏன் உப்புநீர்
ஓடுகிறது?

கடற்கொடை. தாய்தந்த
சீதனம். முதல் உயிர் பிறந்தது
நீரில் என்பதால் ஒவ்வோர்
உடம்பிலும் இன்னும்
ஓடிக்கொண்டேயிருக்கிறது அந்த
உறவுத் திரவம்.

முதல் உயிர் பிறந்தது
கடலிலா? நம்புவதெப்படி
நான்?

கலையின் கழுத்தைக்
கட்டிக்கொண்டாள் தமிழ்.
ஒருவருக்கான காற்றை
இருவரும் சுவாசித்தார்கள்.

சுகபோதையிலும் கலைவண்ணன்
உண்மை உளறினான்.

கடலில் பிறந்த முதல் உயிர்
தண்ணீரில்தானே சுவாசித்திருக்க
முடியும். அந்த மரபுரிமையின்
தொடர்ச்சிதான் இன்றும்
கர்ப்பத்தில் வளரும் சிசு
தண்ணீர்க் குடத்தில்
சுவாசிக்கிறது.

ஆகா, என்று ஆச்சரியம்
காட்டிய தமிழ் அவன் முகத்தில்
முள்குத்தாத பிரதேசம்தேடி
முத்தமிட்டாள்.

அந்த முத்தச்சூடு உயிரெல்லாம்
பரவக்கண்டவன், அவள்
கழுத்தடியில் கைபதித்துக்
குளிரக்குளிரக் குறுமுடி
கோதினான். குழந்தையே.
என் குழந்தையேஎன்று
கொஞ்சினான்.

புரிகிறதா? கடல் நம்
தாய். தாய்கண்டு தமிழ்
அஞ்சலாமா?

தாயென்றால் பூமியை அவள்
ஏன் புசிக்க வேண்டும்?

அவள் மீது குற்றமில்லை.
கடலின் கீழேநகரும் பாறைகள்
அவளை நகர்த்திவிடுகின்றன.

அவளுக்கா கருணையில்லை.
கடல் தந்த அனுமதியால்தான்
முழ்காத நிலப்பகுதி முச்சுவிட
முடிகிறது.

கடல்நீர் இடம்மாறி
நிலப்பரப்பில் நின்றால் எல்லா
இடங்களிலும் முன்று
கிலோமீட்டர் உயரம். தண்ணீர்
நிற்கும்.

புள்ளிவிரம் சொல்லியே
பொழுது
போக்கிவிட்டீர்கள்.

சரி, நல்லவிவரம்
சொல்லட்டுமா? ஒரு
முத்தத்தில் எத்தனை வோல்ட்
மின்சாரம்தெரியுமா?

போதும். போதும்.
புள்ளிவிவரப் புலியே.
ஆளைவிடுங்கள்.

விடமாட்டேன். வா.

தண்ணீரில் நனை அல்லது
தண்ணீரை நனை. அலையோடு
விளையாடு.

தெறிக்கும் திரவநட்சத்திரங்கள்
சொல்லாத இடங்களில்
விழுகையில் இல்லாத அனுபவம்
எழுமே....
அந்த சுகம் துய்.

எத்தனை மனிதர்
கடல்பார்த்தனர்? எத்தனை
மனிதர் இதில் கால்வைத்தனர்?

வா. இந்தச் சிற்றலையில்
கால் வைத்து யாரும் செத்துப்
போனதில்லை.

தண்ணீர் பயம் தவிர்.
சொட்டச் சொட்ட நனை.
கிட்டத்தட்டக் குளி.
நீரின் பெருமை நிறையப்பேர்
அறியவில்லை. காதலி பெருமை
பிரிவில். மனைவி பெருமை
மறைவில். தண்ணீரின் பெருமை
பஞ்சத்தில். அல்லது
வெள்ளத்தில்.

நீ உணவில்லாமல் ஒருமாதம்
வாழலாம். நீரில்லாமல்
ஒருவாரம் வாழமுடியாது.
தண்ணீர்தான் உயிர். இந்தக்
கடல் அந்த உயிரின் தாய்.
தாயோடு தள்ளி நிற்பதா?
வா.

எட்டி நின்றவளைக் கட்டிப்
பிடித்தான். திமிறினாள்.
வாழைத்தண்டாய்
ஓடிந்தாள். வாளை மீனாய்
வழுக்கினாள்.

அவன் முன்னுக்கிழுத்தான். அவள்
பின்னுக்கிழுத்தாள்.

வேண்டாம். இந்த
விளையாட்டுமட்டும்
வேண்டாம்.

என்னோடு வாழ்ந்தால் நீ
நெருப்புப் பள்ளங்கள் தாண்ட
வேண்டியிருக்கும். நீர்கண்டு
பயந்தால் எப்படி?

நெருப்புப் பயம் இல்லை.
தண்ணீர்தான் பயம்.
அவன் தூக்கமுயன்றான். அவள்
துவண்டு விழுந்தாள்.

கைதட்டிச் சிரித்தன அலைகள்.
நாடகம் பார்த்தன நண்டுகள்.

சிதறிவிழுந்தவளைச்
சேர்த்தெடுத்தான். அவளைச்
சுமந்து அலையில் நடந்தான்.

அவளோ அந்தரத்தில்
நீச்சலடித்தாள். இடுப்பளவுத்
தண்ணீரில் இறக்கிவிட்டான்.
அஞ்சினாள். தண்ணீரின்
ததும்பலில் மிரண்டாள்.

அவனை உடும்பாய்ப்
பற்றினாள். அவன் உதறி
ஒதுங்கினான்.

நுரைச் சதங்கைகட்டி ஆடிவந்த
அலைகள்கண்டு அலறினாள்.
பிரமைபிடித்துப்
பேச்சிழந்தாள்.

தூரத்திலிருந்து ஒரு பேரலை
அவள் பெயர் சொல்லிக்
கொண்டே படைதிரட்டி
வருவதாய்ப் பட்டது அவளுக்கு.
அவ்வளவுதான்.
அவள் ஞாபகச்சங்கிலி
அறுந்துவிட்டது.

அந்த முர்க்க அலையின்
மோதுதலில் தன்னிலை குலைந்து
தடுமாறி எழுந்து ஒருகணம்
மிதந்து மறுகணம் அமிழ்ந்து
மீண்டும் எழுந்து மீண்டும்
விழுந்தாள். அலைகளில்
தொலைந்தாள்.


கவிப்பேரரசின் பதிவு தொடரும்...