Friday, July 10, 2020

இது ஓர் ஆதங்கம்


பல இன்னல்களைச் சந்தித்த தமிழ் மக்கள் அன்று ஓரளவிற்கேனும் தமது குடும்பங்களுடன் நின்மதியான ஓர் வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டு வந்தார்கள். அன்றைய காலத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கிய இடர்பாடு ஒரு பகுதியினரூடாகவே இருந்து வந்தது ( நீங்கள் உங்களுக்கு சார்பான பகுதியினரை விலக்கிப் பார்த்துக் கொள்ளலாம் ). ஆனால் இன்று எமது மக்கள் எந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுப்பது என்று தெரியாது சொல்லனா துயரங்களில் வாடி வருகின்றனர். 

அரசியல் அழுத்தங்கள், சமூக வன்முறைகள், குடும்ப வன்முறைகள், வாள் வெட்டுக் குழுக்களின் அடக்கு முறைகள், போதைப் பொருள் வர்த்தகம், நுன்கடன் சுமைகள் எனப் பல..

இந் நிலையில், அரசியல் களங்கள் சூடு பிடித்து ஓடிக் கொண்டு இருக்கின்றன. இம் முறை தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் பலர் தமிழர்களுக்கான உரிமையை வென்று கொடுக்க தேர்தல் களத்தில் பிரவேசித்துள்ளனர். பல அறிந்த முகங்களுடன் பல புதிய முகங்களும் இம் முறை இப் பந்தயத்தில் கலந்துகொண்டுள்ளனர். 

அண்மையில் ஒரு பிரபல கட்சியின் வேட்பாளர் ஒருவருடன் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிட்டியது. அவர் தேர்தல் என்றால் என்ன?   ஏன் தேர்தலில் வாக்குப் போட வேண்டும்? ஏன் தமிழ் கட்சிகளுக்கு வாக்குப் போட வேண்டும் என்ற விளக்கத்துடன் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து தான் முன்னிலைப்படுத்தும் கட்சிக்கும் தனக்குமான வாக்கைப் பதிவிடுமாறும் கோரிக் கொண்டார். பின்னர் கேள்வி கேட்பதற்கான நேரத்தினையும் தந்தார். எம் பலரிடமும் இருந்து வந்த ஒரே கேள்வி “ இவ்வளவு காலமும் என்ன செய்தனீங்கள், இப்போ என்ன புதுசா செய்யப் போறீங்கள்”?

சின்னதாக ஒரு சிரிப்பு அவர் முகத்தில். ஏனெனில் இக் கேள்வி தான் தன்னை நோக்கிவரும் என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். இவ்வளவு காலமும் இருந்தவங்கள் ஒன்றும் செய்யேல்லை என்று நீங்கள் நினைத்தால், அது தான் நாங்கள் புதுசா வந்திருக்கிறம் தானே எங்களை அனுப்புங்கோ, நாங்கள் செய்து காட்டிறம்”என்று சொல்லி வழக்கத்தை மாத்தாமல்(அதாவது வழமையா போடிற கட்சிக்கே போடுங்கோ, வேற ஆட்களை தெரிவு செய்யுங்கோ)  ஆட்களை மாத்துங்கோ என்றார். நாங்கள் பதில் கூறவில்லை. சின்ன ஒரு புன்சிரிப்பு ஒன்றை தவளவிட்டோம். தன் பதிலில் எமக்கு திருப்தி இல்லை என்பதை புரிந்து கொண்டு அவர் அவ்விடம் விட்டு நகர்ந்தார்.

இன்னொரு அரசியல் பிரதேச சபையில் தெரிவாகியவர்களை வைத்து நடைபெறுகிறது. சிரிப்பும் வருகிறது. அவர் றோட்டுப் போட்டு தந்தார். அவர் வீதிகளுக்கு விளக்கு போட்டு தந்தார். அவர் கொரோனா காலத்தில சாப்பாடு தந்தார். எல்லாம் செய்தார்!!! எல்லாம் தந்தார்!!! யாருடைய காசில தந்தார். யாருடைய காசில செய்தார். வருடாவருடம் ஒதுக்கப்படும் நிதிகளில் அபிவிருத்திப் பணிகள் நடைபெறுவது வழமை. இதை தமது தேர்தல் விளம்பரத்திற்காக பயன்படுத்துகின்ற கோமாளிகளை என்னும் போது சிரிப்பு வருகின்றது. 

நான் உங்களைக் சில சந்தேகங்கள் கேட்கிறேன்!!! 

நீங்கள் கொடுத்த ஒரு கிழமைக்கான நிதிகளாகட்டும், பொருட்களாகட்டும் அவனின் வாழ் நாள் தேவையினை நிறைவேற்றுமா? நீ கொடுத்தது முடிவடைந்தவுடன் அவன் இன்னொரு கையை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பான். இப்போது அவன் யாருக்கு வாக்களிப்பது? முதலில் உதவி செய்த உனக்கா? கடைசியாக உதவி செய்துவிட்டு போனவனுக்கா? 

உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். நீங்கள் செய்த நற்செயல்களுக்கு தலைவணங்குகிறேன். ஆனால், நீங்கள் உதவி செய்த குடும்பங்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நீங்கள் அவர்களுக்கு எவ்வாறு வழிகாட்டினீர்கள் என்பதைக் கேட்டுக்கொள்கிறேன். அவ் வறிய குடும்ப பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு எவ்வகையில் பங்களிப்பு செய்தீர்கள். கல்வியால் தான் உங்களின் குடும்ப நிலைமையை மாற்றலாம் என்ற அறிவுரையை கொடுத்தீர்களா?  நீங்கள் செய்யும் அரசியல் எத்தகையது என்ற புரிதலுக்கு வருவதே கடினமாக உள்ளது.  

ஒரு குறித்த அரசியல் கட்சியின் இரு வேட்பாளர்களின் நிலை....

ஒரு வேட்பாளர் கூறுகிறார்... ”இன்று தமிழர்கள் மத்தியில் பௌத்த கலாச்சாரத்தையும் இராணுவ மயமாக்கலையும் அரசு வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடுகிறது.”

அதே கட்சியைச் சேர்ந்த இன்னொரு வேட்பாளர்... “ தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதாது தனது பாதுகாப்பிற்கு பொலிஸ் மற்றும் இராணுவ ஆதரவினை அரசிடம் கேட்டுள்ளார்” 


உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? விளங்கவில்லையே? ஒரே கட்சியில் உள்ள இருவரின் மனநிலையில் இப்படியான வேறுபாடு என்றால்.. நீங்கள் ஒரே கட்சியாக சேர்ந்து எவ்வாறு தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுத் தருவீர்கள். 

       “ மக்களே இப்படியானவர்களிடம் சற்று அவதானமாக இருங்கள்”

ஒரு விடயம் மட்டும் நிதர்சனமான உண்மை. அவர்கள் இருந்த போதே பெற்றுக் கொடுக்காத அரசியல் தீர்வினை இங்கு எவருமே எமக்குப் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. எதைச் செய்யப் போகிறோம் என்ற கொள்கை விளக்கம் கூட இல்லாது எதிர்ப்பு அரசியலை மட்டுமே பிரச்சாரமாகச் செய்யும் இவர்கள் எதையுமே பெற்றுத் தரமாட்டார்கள்.

தமிழ் மக்களாகிய எமது இப்போதைய தேவை அரசியல் தீர்வா? நின்மதியான வாழ்வா? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

சராசரியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்லும் ஒரு தமிழனின் தற்போதைய தேவை....
  • வாள்வெட்டுக் கலாசாரத்தை முற்றாக அடக்க வேண்டும். இதை எந்த அரசியல் கட்சி நிறைவேற்றும்.
  • எமது பிரதேசங்களுக்குள் நடைபெறும் போதைப் பொருள் வியாபாரத்தை முடக்குவதற்கு எந்த அரசியல் கட்சி ஆதரவளிக்கும்
  • வீடற்றவர்களுக்கான வீட்டுத் திட்டங்களை எந்த அரசியல் கட்சி விரைவில் பெற்றுக் கொடுக்கும்
  • தமிழ் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தினை எந்தக் கட்சி விரும்பி ஏற்றுக் கொள்ளும்
  • புணர்வாழ்வில் இருந்து திரும்பியவர்களை எந்தக் கட்சி திரும்பிப்பார்க்கும்
  • உள்ளூர் உற்பத்திகளுக்கான சரியான சந்தைப்படுத்தல்களை எந்தக் கட்சி ஏற்படுத்திக் கொடுக்கும்
  • வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான நிரந்தரத்தீர்வினை யார் பெற்றுக் கொடுப்பீர்கள்
  • சகல துறைகளிலும் பிரகாசிக்கக் கூடிய விளையாட்டு வீரர்கள் உள்ளார்கள். இவர்களுக்கான முறையான பயிற்சிகள் மற்றும் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கப்போவது யார்?
  • தேசிய அணிகளில் இடம்பெறக்கூடிய வாய்ப்புக்கான பாதையை அல்லது முறையான வழிகாட்டலை யாரால் செய்து தர முடியும்
இது போன்ற பல கோரிக்கைகள் உள்ளன. எங்களுக்கு முதலில் இவற்றுக்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுங்கள். பின்னர் தேசியத்தைப் பெற்றுத்தாருங்கள். 

பசியோடு இருப்பவனுக்கு சமையல் அறையை கட்டித்தாறம் நீ சமைச்சு சாப்பிடு என்று சொல்வது முட்டாள் தனம். 

உங்கள் அரசியல் தீர்வும் அது போன்றது தான். மக்களுக்கான உடனடித்  தேவைகள் பல உள்ளன. அதைவிடுத்து ஏமாற்று அரசியலில் ஈடுபடாதீர்கள்.

இது அரசியல் பதிவல்ல. ஓர் ஆதங்கப் பகிர்வு.

பிள்ளையார் சுழி எதற்காக? - பகுதி 2

தொடர்ச்சி........


கவிஞனுக்கு இந்தக் கஸ்ரம் இல்லை. அவன் அழகுணர்ச்சி, கவிதை, அளவு கடந்த நெகிழ்ச்சி இவற்றுடன் பிரபஞ்சத்தை நெருங்குவதால் பிரபஞ்சம் தன் இரகசியங்களை அவன் காதுகளில் கிசுகிசுத்து விட்டு சிரிக்கின்றது. விஞ்ஞானி ஆண் தன்மையுடன் பிரபஞ்சத்தை அடக்கியாள நினைக்கிறான். கவிஞன் பெண் தன்மையுடன் பிரபஞ்சத்தை நெருங்குவதால், பிரபஞ்சம் அவனிடம் தன்னைக் கொடுக்கின்றது. தன் சகல இரகசியங்களையும் ஒளிவுமறைவின்றி சொல்லிவிடுகிறது.

கவிஞன் பிரபஞ்சத்திடம் ஒரு பெண் போல் சரணடைகிறான். பிரபஞ்சம் அவனிடம் காதல் கொள்கிறது. ஆனால் விஞ்ஞானி பிரபஞ்சத்தை கைப்பற்றுகின்றான். கவிஞன் பிரபஞ்சத்தின் கரம் பற்றுகின்றான். முன்னது கற்பழிப்பிற்குச் சமம் .... பின்னது காதல் முடிந்த கலவிக்கு நிகர். 

ஒரு தாமரையை ஆராய்கிற விஞ்ஞானி, அதைத் தன் ஆய்வு மேசையில் வைத்து அக்கு வேறு ஆணி வேறாகப் பிய்த்து அதன் உண்மைகளை கண்டறிகின்றான். கவிஞனோ வெளியில் உள்ள தாமரையைச் சட்டை செய்வதே இல்லை. அவனுக்குத் தாமரை பற்றிய தகவல் வேண்டுமென்றால் அவன் தவிப்பு, காதல் தாமரைக்குப் புரியும். அவனுள் அது மலரும். விரியும்.. தன்னைப் பற்றிய சகல இரகசியங்களையும் அது அவனுக்குச் சொல்லிக் கொடுக்கும். இதுதான் வேதகாலத்தில் நடந்தது... அதற்கு முன்னும் நடந்தது... இன்றும் நல்ல கவிஞனுக்கு இது தான் நடக்கிறது.

ஒரு மலருக்கு நிறம், மணம், குணம், வடிவம் இவை உண்டு என்று மட்டுமே பலர் நினைத்தனர். மலருக்கு ஒளி உண்டு என்பதை ` கிரிலியோன் போட்டோகிராபி` உருவாகும் வரை எவருமே அறியவில்லை. ஆனால் கிரிலியோன் போட்டோகிராபியைப் பற்றி ஏதும் அறியமுடியாத மகாகவி பாரதி `சோலை மலர் ஒளியோ உன் சுந்தரப் புன்னகைதான்` என்று மலருக்கு ஒளி உண்டு என்று அநாயாசமாகச் சொல்லிவிட்டான். பாரதிக்கு தகவல் கொடுத்தது எது? பூ. அது அவனை நேசிக்கிறது.எனவே தன் தகவல்களைப் பாட்டில் பதிவு செய்யும் படி யாசிக்கிறது.

                                                                                                                            தொடரும்..........

Thursday, July 9, 2020

பிள்ளையார் சுழி எதற்காக?


`உலகம் யாவையும்` என்று கம்பன் பாடிய இராமாயணத்தில் கடவுள் வாழ்த்து ஆரம்பமாகிறது. இந்த வரிக்கு இரண்டு பொருள் கொள்ள முடியும். உலகம் என்பது உலகில் உள்ள சகல உயிரினங்களையும் குறித்தது என்று கொண்டு, பலகோடி உயிர்கள் யாவையும் `கடவுள் இருப்பு பெற்றன... அல்லது உண்டாயின` என்று பொருள் கொள்ளலாம்.

அதேசமயம், `உலகம் யாவையும்` என்பதை அண்ட வெளியில் உள்ள பல்வேறு உலகங்களையும் என்று அர்த்தம் செய்து, `பலப்பல உலகங்கள்` கடவுளால் படைத்து, காத்து, திருத்தப்படுகின்றன என்றும் பொருள் சொல்லலாம். உலகம் பலப்பல உண்டு என்பது அண்மைக்கால விஞ்ஞான வெளிச்சம். ஆனால் உள்ளொளி மிக்க கம்பன் போகிற போக்கில் அதைச் சொல்லி விட்டார். பலப்பல உலகங்கள் உண்டு என்பதை இரணியன் வதைப்படலத்திலும் கம்பன் பாடியிருக்கிறார்.

விஞ்ஞானி ஆராய்ந்து, படாத பாடுபட்டு, ஏகப்பட்ட சான்றுகளை எடுத்துரைத்து வெளியிடும் முடிவுகளைப் போகிற போக்கில் கவிஞன் எப்படி சொல்கிறான்? வெகு எளிய பதில் உள்ளது. கவிஞன் மெய்ஞ்ஞானி. விஞ்ஞானி தேடித்தேடி கண்டுபிடித்ததைக் கவிஞன் உட்கார்ந்த இடத்தில் பெற்றுக் கொள்கிறான். தாராளமாகச் சொல்லி விடுகிறான். 

விஞ்ஞானியின் பார்வையில் உலகம் ஜடப்பொருள்,புறப்பொருள். அதனாலேயே அதன் இரகசியங்கள் அவனை வழிமறிக்கின்றன. அவன் அதன் உண்மைகளை உடைத்துச் சொல்லத் தேடுகிறான். ஆனால் பிரபஞ்சத்தை வெளியே உள்ள ஜடப்பொருளாகப் பார்த்தால் , அவன் சிந்தனைப் போக்கை அது வழிமறித்து குறுக்கே நிற்கிறது. அவன் அதை ஊடுருவிப் பார்க்க x-ray, scan,telescope, microscope என்று கருவிகளை அமைத்துப் போராடுகிறான்.

விஞ்ஞானி எதை ஆராய்கிறானோ அதுவே அவனுக்குப் பெருந்தடை. அதுவே குறுக்கே நின்று அவன் வழியை மறுக்கிறது. அவன் அதை அழகுணர்ச்சியுடன், காதல் பார்வையுடன் ரசிப்பதில்லை.அதனால் பிரபஞ்ச இரகசியத்தை விளக்க விரும்பும் விஞ்ஞானிக்கு அந்தப் பிரபஞ்சமே தடையாகிப் போகிறது.

இமயமலைக்கு யாத்திரை போனார் ஓர் அறிவாளி. திரும்பி வந்ததும், `` எப்படி இருந்தது இமயம்.... என்ன அனுபவித்தீர்கள்.... என்ன கண்டீர்கள்?`` என்று நண்பர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தார்கள். எரிச்சலுடன் அறிவாளி சொன்னார்... `` என்னத்தை பார்க்கிறதாம்.... அங்கதான் பெரிய மலை எல்லாத்தையும் மறைச்சுக்கிட்டு நிக்குது.... அப்புறம் என்னத்தைப் பார்க்கிறது.. எதை ரசிக்கிறது? இதுதான் பிரச்சினை. எந்த பிரபஞ்சத்தின் ரகசியங்களை உடைத்துக்காண விஞ்ஞானி விரும்புகிறானோ, அந்தப் பிரபஞ்சம் ஜடப்பொருளாக அவனுக்குத் தெரிந்தால், அதுவே அவனுக்குப் பெருந்தடை. அதனால்தான் விஞ்ஞானி போராடுகிறான். முடிவில் பிரபஞ்ச ரகரியங்களை ஒரு மிகப்பெரிய போர்வீரனாக அவன் கைப்பற்றுகிறான். பிரபஞ்சம் அவனுடன் ஒத்துழைக்க மறுப்பதால் அவன் வெகுவாகக் கஸ்டப்படுகிறான்.

                                                                                                                                தொடரும்.........  


நன்றி- சொல்வேந்தர் சுகி.சிவம்                                                                                                                                

மு. மேத்தாவின் கவிதைகளில் இருந்து.....

💗💗💗காதலர் பாதை💗💗💗

💖
கல்யாண மேடையை 
அலங்கரிப்பதற்காகக் 
கனவு கண்ட 
கன்னிப் பூக்கள்
சவப்பெட்டியின் மேனியில்
சரிந்து விழுந்தன !
💖

💞💞💞என் முதற் காதல்💞💞💞

😍
முகவரி
சரியாக எழுதப்படாத
ஒரு கடிதம்
முட்டி மோதி அலைந்து விட்டு
என்னிடமே திரும்பிவிட்டது!
😍

😌😌😌அரலிப்பூ அழுகிறது😟😟😟

💀
பூக்களே நானுமொரு
பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்

பூவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்டலையே!

பொன் விரல்கள் தீண்டலையே - நான்
பூமாலை யாகலையே!
💀