Tuesday, August 9, 2011

மெளனமாக இருக்காதீர்கள்!

கோபம், சண்டை வரும் போது ஆவேசமாக கத்தி சண்டைபோடும் தம்பதியர், அதி விரைவில் மீண்டும் ஒன்று சேர்ந்து கொள்வதும், பிடிக்காத காரணத்தால் பேசாமல் இருக்கும் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர நாட்கள் ஆவதும் கண்கூடாக நாம் பார்க்கும் உண்மை. 


ஏனென்றால், மெளனம் என்பது ஒரு கூர்மையான் ஆயுதம். அதனை முறையான சரியான விடயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன் - மனைவிக்கிடையில் சண்டை வரும் போது இருவரும் மௌனமானது பெரும் ஆபத்தாகும்.

ஏனென்றால் மௌனமாக இருக்கும் போது, மூளையில் இனம் புரியாத ஒரு சக்தி அமர்ந்து கொள்ளும். காதலிக்கும் போது நடந்த விடயங்கள் எல்லாம் நாடகமாகவும், இப்போது இருப்பது தான் நிஜம் என்றும் எடுத்துக்காட்டும். மேலும் இதுவரை என்னென்ன குறைகள் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கிறது என்று கெட்ட விடயங்கள் மட்டுமே மனதில் திரைப்படமாக ஓடிக்கொண்டிருக்கும்.
மேலும் இருவரும் மௌனமாக இருப்பதால் யார் முதலில் பேச வேண்டும் என்ற தற்பெருமை வளர்ந்து வெட்டமுடியாத பெரிய மரமாக மாறிவிடும். 

முதலில் அவர் தான் பேச வேண்டும் என இவரும், இவர் தான் பேச வேண்டுமென அவரும் கொஞ்ச நாள் காத்திருப்பார்கள். இருவரும் பேசாமல் இருக்கும் பொழுது, இனிமேல் அவராக வந்து பேசினாலும், பேசக்கூடாது என்ற நிலைக்குப் போய்விடுவார்கள். அதற்குப் பின் சமாதானம் என்பது சற்றே கடினமானது. 

அதனால் ஏதாவது பிரச்சினை என்றால் திட்டுங்கள், சண்டை போடுங்கள், ஆனால் அமைதியாக மட்டும் இருந்து விடாதீர்கள். கதையுங்கள், கதைத்துக் கொண்டேயிருங்கள்.

                                                 ************ நன்றி************

No comments:

Post a Comment