Friday, July 1, 2011

இது காதல் ஒரு புது கவிதை .................(பாகம் 3)

ஏதேதோ எதிர்பார்த்தான்
என்ன பழக்கம் என்றாள் ..


சிரித்தாள்
அப்புறம்,
சொல்லுங்க அவ்வளவுதானா ?


உனக்கும் எனக்கும்
வார்த்தைப் பழக்கம் துவங்கி
ஒரு வருடம்  தான் முடிந்திருக்கிறது
காதல் வந்துவிட்டதென்று கற்பனையா ?



நாம் நண்பர்களாய் இருப்பதில் தான்
என் மனசு நிம்மதிகொள்கிறது.
குழம்பாமல்
மனசை நீரோடையாய் நடக்கவிடுங்கள்.
அது
கடலைச் சேரும் வரை காத்திருங்கள்


நதியைத் தேடி
கடல்
கரைதாண்டி வந்ததாய் சரித்திரமில்லை !!!


உங்களை எனக்குப் பிடிக்கும்.
அது காதலின் முன்னுரையல்ல
நட்பின்
விளக்கவுரை என்பதை
விளங்கிக்கொள்ளுங்கள்.

அமைதியாய் சொன்னாள் சுடர்விழி.


சட்டென்று வந்த சரளமான பதிலில்
சற்றே திகைத்து,
தொடர்ந்தான்


கொஞ்சம்
சிந்தித்துப் பார் சுடர்விழி.


விளக்கைக் கொளுத்த
வினாடிநேரம் போதும்
அது போல் தான் காதலும்.


நட்பு என்பது
காதலின் முகவுரையில்லை
என்று முரண்டுபிடிக்காதே.


நான்
துளியாய் தான் இருந்தேன்
உன்னில் சரிந்தபின்பு தான்
அருவியானேன்.

இப்போது அது விஸ்வரூபம் கொள்கிறது.


நான் விரிந்துவிட்டேன்
இனி
மொட்டுக்குள்
மீண்டும் போக நிர்ப்பந்திக்காதே.

மழையை மேகத்துள்
திணிக்க முயலாதே.


இதயத்துடிப்பு தான்
நீயென்று நினைத்திருந்தேன்
இல்லை
இதயமே நீ தான் என்று
விளங்கிக் கொண்டேன்


என் மூச்சுக்காற்று நீ என்றால்
நான்
வேறுகாற்றை  வேண்டியிருப்பேன்

ஆனால் நுரையீரலே நீதான் என்று
என் உடலின்
ஒவ்வொரு அணுக்களும்
ஒத்துக்கொள்கின்றன.


சொல்லிவிட்டேன் என் பிரியமே
பிரிவதற்குப் பிரியப்படாதே.


எப்படி முடிந்தது என்று
அவனால் சொல்லமுடியவில்லை
ஆனால்
சொல்லிவிட்டான்.


சொல்லாத காதல்,
முளைக்காத விதைபோன்றது
சொல்லிவிட்டான்
பயிர் விளையவேண்டுமே எனும் வேண்டுதலோடு,
களை விளைந்துவிடுமோ எனும்
கவலையும் அவனுக்கு !!!

அவள் பதில்...

                                                                பார்த்தியின் பதிவு தொடரும்.....

No comments:

Post a Comment