Saturday, July 2, 2011

இது காதல் ஒரு புது கவிதை .................(பாகம் 5)

வானவில் ஒன்று
விரல்களில் விழுந்துவிட்டு
விலகிச்செல்கிறதா ?


அணைதிறந்ததும்
தண்ணீர்த்துளிகள்
அமிலமாகிவிட்டதா ?


சுவாசிக்கும் காற்றுக்குள்
மூச்சடைக்கும் மருந்து
முழுகிவிட்டதா ?


ரோஜா நிமிர்ந்தபோது
நந்தவனத்துக்கு சிரச்சேதமா ?

புரியவில்லை அவனுக்கு.

முட்டை ஒட்டுக்குள் இருக்கிறது
அவன் மனசு.
கொஞ்சம் அசைந்தாலும்
உடைந்துவிடுவதாய் உணர்ந்தான்.


மாலை நேரம் மெதுவாய் நகர
இதயத்துடிப்பு மட்டும்
இரண்டரை மடங்கு அதிகமாகி விட்டது.


சூரியன் விழுவதற்கும் எழுவதற்கும் இடையே
இவ்வளவு இடைவெளியா ?
இதென்ன
இன்றைய இரவு மட்டும் ஆமை ஓட்டுக்குள்
அடங்கிவிட்டதா ?


கடிகாரம் வினாடிகளைக் கடக்க
நிமிட நேரம் எடுத்துக்கொள்கிறதா ?
புரியவில்லை அவனுக்கு.


தூக்கம் என்பது விழிகள் சம்பந்தப்பட்டதில்லை
என்பதை
முதன் முதலாய் உணர்கிறான்.
விழித்தே இருப்பதின் வேதனை அறிகிறான்


காதல் என்ன கல்லூரி ஆசிரியரா ?
புதிதாய் புதிதாய் விளக்கம் தருகிறதே

அவன் மன ஓட்டம்
நயாகராவை விட
வேகமாக ஓடியது.


பிரமிடுகளில்
புதைக்கப் பட்டதுபோல பிரமை.

தூங்கவே இல்லை என்பதை
விடியல் சொன்னபோது தான்
விளங்கிக் கொண்டான்.


தூக்கமில்லாத இரவு.
அது ஒரு துயரம்.

களைப்பு

கண்களையும் கால்களையும் வம்புக்கு இழுக்க
கவனமாய் நடந்தான்.


என்ன இனியன்,
கண்கள் முழுதும் உதட்டுச்சாயம் பூசினாயா?
இல்லை
கண்ணில் கடித்த கொசுவை
அங்கேயே நசுக்கிவிட்டாயா ?

சிரித்தபடி கேட்டார்கள் நண்பர்கள் 

அதெல்லாம் இல்லை.
கடிகாரம் ஓடுவதை
கணக்கெடுத்துக் கொண்டிருந்தேன்.  


அவளது தொலைபேசி அழைப்பு
வரவே
அவனது முகம் கேள்விக்குறி 
ஆகியது
அவளே பேச தொடங்கினாள்......

                                                                                             பார்த்தியின் பதிவு தொடரும்.....
                                                                                      

No comments:

Post a Comment